பொருளாதாரத்தை இலக்கு வைத்த துவேஷ நெருப்பு

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்

முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வு பெரும்பான்மை சமூகத்தவர் மத்தியில் எப்படியெல்லாம் ஊட்டப்பட்டிருக்கிறது, அது என்ன வடிவங்களில் வெளிப்படுகிறது என்பதற்கான சில ஆதாரங்களை இங்கு பார்க்க முடியும்.ஓர் ஆலிமிடமிருந்தும் ஒருவியாபரியிடமிருந்தும் ஒரு சமூக சேவகரிடமிருந்தும் பெறப்பட்ட சில தகவல்களும் பத்திரிகைச் செய்திகளும் இவற்றில் உள்ளன.

பாடசாலை மாணவர்களது உள்ளங்களில் துவேஷ விஷம் – கலந்தது யார்? விளைவு என்ன?

1.கண்டி மாவட்டத்தின் ஒரு பிரபல சிங்கள பாடசாலையில் முதலாம் வகுப்பில் படிக்கும் முஸ்லிம் மாணவனை சூழ்ந்து கொண்ட சக வகுப்பு சிங்கள மாணவர்கள் ‘ஊ மரக்களயெக் ஊட்ட கஹண்டோனே’என அவனைத் தாக்க முயற்சித்தனர்.அதனைக் கண்ட நடுநிலையான ஒரு சிங்கள ஆசிரியை அதனைத் தடுத்து நிறுத்தியதுடன் அது பற்றி அதே பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியரிடம் கவலையோடு தெரிவித்திருக்கிறார்.

2.பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரும் மனைவியும் சிறிய மகனும் முஸ்லிம் ஹோட்டேல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு பணம் செலுத்த கெஸியரிடம் வந்த போது அந்த சிறிய மகன் தனது பெற்றோரைப் பார்த்து ‘முஸ்லிம்களது கடைகளில் சாப்பிட வேண்டாம் என்று எமக்கு எமது மதகுரு சொல்லியிருக்கிறாரே. அப்படியிருக்க இங்கு ஏன் வந்தீர்கள் ?’என கேட்டானாம்.அப்போது தாய் மகனின் சப்தத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அவனது வாயை கையால் மூடியிருக்கிறாள்.

3.தெல்தெனிய கலவரம் நடந்த பின்னர் ‘ஃபேஸ் புக்’ தடைசெய்யப்பட்டிருந்து.அக்காலப் பிரிவில் கம்பஹ மாவட்டத்தின் கிராமமொன்றைத் தாக்க கொழும்பின் பிரபல சிங்கள பாடசாலையொன்றில் க.பொ.(உ.த.)கணிதப் பிரிவில் கற்கும் 3 மாணவர்கள் இரவு 2 மணியளவில் மோட்டர் சைக்கிளில் வந்தனர்.பொலீஸாரிடம் மாட்டிக் கொண்ட அவர்கள் விச்சரிக்கப்பட்ட போது முஸ்லிம்களால் தான் தமக்கு ஃபேஸ்புக் பாவிக்க முடியாமல் இருப்பதாகவும் இதற்காக முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் புகட்டவே தாம் வந்ததாகவும் கூறியுள்ளனர்.அவர்கள் தமது மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தடுகளைக் கழட்டியிருந்துடன் பெற்றோல் குண்டுகளையும் வைத்திருந்தனர்.இந்த செய்தி ‘லங்கா தீப’யிலும் வந்தது.விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் தற்போது வழக்கு விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.

  1. 25.3.2018 ஆம் திகதி சண்டே டைம்ஸ் செய்தி இப்படிக் கூறுகிறது:

“குற்றப் புலனாய்வுத் திணக்களத்தின் அறிக்கையின்படி பாடசாலை மணவர்கள் தமது பெற்றோரின் தொலைபேசிகளைப் பயன்படுத்தி இனங்களுக்கும் மதங்களுக்கும் எதிரான வெறுப்பைத் தூண்டும் செய்திகளைப் பகிர்ந்துள்ளனர். “பல மணவர்கள் ‘சொஸியல் மீடியா’ குழுக்களை உருவாக்கி இவ்வேலைகளைச் செய்து வருகிறார்கள்.உதாரணமாக, பெற்றோல் குண்டுகளைத் தயாரிக்கும் முறை பற்றிய தகவல்களை அவர்களில் ஒருவர் பகிர்ந்திருக்கிறார். மற்றுமொருவர் மத வழிபாட்டுத் தலம் ஒன்றைத் தாக்குவதற்கு ஒன்று கூடுமாறு சிலரை அழைத்திருக்கிறார்.” என குற்றப் புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்” என அந்த பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

பொருளாதாரத்துக்கு வேட்டு

1.முஸ்லிம்களது கடையொன்றுக்கு வந்த பெரும்பான்மை இனத்தவர் தமது ஊர்(அ…….ல) ஆலயத்தின் பெயரைக் கூறி அதில் முஸ்லிம்களது கடைகளில் சாமான் வாங்க வேண்டாம் என்று கூறியிருப்பதாகவும் அப்படியிருந்தும் அவர் வந்திருப்பதாகவும் எனவே சாமன்களை குறைந்த விலைக்குத் தரும்படியும் கேட்டிருக்கிறார்.

2.முஸ்லிம் கடை ஒன்றுக்கு வந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் இலட்சக் கணக்கான ரூபாய்கள் பெறுமதியான சாமன்களுக்கு ‘பில்’ போட்டு விட்டு சமான்களை எடுக்க முன்னால் அங்கு ‘ஆயதுல் குர்ஸீ’ தொங்கவிடப்பட்டிருந்தைப் பார்த்து விட்டு அது ஒரு முஸ்லிம் கடை தான் என்பதை ஏற்கனவே தெரிந்திருந்தால் அங்கு வந்திருக்கப் போவதில்லை என்று கூறிவிட்டு சாமான்களை எடுக்காமல் போயிருக்கிறார்.

3.முஸ்லிம் ஒருவரது த்ரீ வீலில் ஒரு பெரும்பான்மை இனத்தவர் பயணம் செய்து விட்டு ‘மரக்கலயா’ வுக்கு ஹயர் தரப் போவதில்லை என்று கூறி இறங்கிச் சென்றிருக்கிறார்.

முஸ்லிம்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் எவற்றை உணர்த்துகின்றன?

1.பெரும்பான்மை இனத்தவர்களது இளம் பிள்ளைகளது மனங்களில் துவேசம் மிகவும் நிணுக்கமாக விதைக்கப்பட்டு வருகிறது.அதுவும் பாடசாலை மாணவர்கள்.இவர்கள் தான் எதிர்காலத்தில் பொலிஸ் அதிகாரிகள்,டாக்டர்கள்,காரியாலய உத்தியோகத்தர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மீடியாக் காரர்கள்.சமூகத்தில் தீர்மானம் எடுக்கும் பதவிகளுக்கு வர இருப்பவர்கள்.எனவே நிலை எப்படி இருக்கும்?.அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.முஸ்லிம்கள் எப்படியேல்லாம் இவர்களால் நசுக்கப்படலாம்.ஓரம் கட்டப்படலாம் என்று கற்பனை பண்ணவும் முடியாது.

2.முஸ்லிம்களது பொருளாதாரம் வியாபாரத்திலேயே பெரும்பாலும் தங்கியுள்ளது.அதில் கை வைத்தால் அவர்களால் என்ன தான் செய்யலாம்? முஸ்லிம்களில் 60%ஆனவர்கள் வறுமைக் கோட்டிட்குக் கீழால் தான் வாழுகிறர்கள்.நாட்டின் பெரும் பெரும் வியாபார கம்பெனிகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக இல்லை. எனவே,வியாபாபாரத்தில் ஒரு சிறிய சரிவு கூட அவர்களைப் பெரிய அளவில் பாதிக்கும்.என்ன தான் செய்யலாம்?

3.முஸ்லிம்களுக்கெதிரான ஒரு பெரும் கலாசாரப் படையெடுப்பை அதாவது சிந்தனப் படையெடுப்பை துவேசம் கொண்ட விஷமிகள் செய்து வருகிறார்கள்.இது மிக ஆபத்தானது.இஸ்லாம் ,முஸ்லிம்கள்,முஸ்லிம்களது வியாபாரம் பற்றிய தப்பான கருத்துக்கள் பல மட்டங்களில் சூட்சுமமாகப் பரப்பப்பட்டு வருகின்றன.அவற்றின் வித்துக்கள் தூவப்பட்டு வருகின்றன.அவை சில போது உடனடியாக நச்சுக் கனிகளைத் தரலாம்.அல்லது நீண்ட ,ஆழமான பதிப்புக்களை ஏற்படுத்தலாம்.எல்லாமே ஆபத்துத் தான்.

4.இப்படி வாழ முடியுமா? முடியாது; வாழக்கூடாது.முஸ்லிம்களுக்கு சிங்களவர் தேவை. சிங்களவருக்கு முஸ்லிம்கள் தேவை.ஏனைய மத,இனங்களைச் சேர்ந்தவர்களும் அப்படித் தான்.உலக இயக்கத்தில் தங்கி வாழுவது (interdependence)என்பது தவிர்க்கமுடியாது. பகைமையும் தப்பபிப்பிராயமும் நிலவும் காலமெல்லாம் சமாதான சக வாழ்வு நிலவ மாட்டாது.அது வெறுப்பாக வளர்ந்து மோதலும் யுத்தமும் ஏற்படும்.அதனை நோக்கியே நாட்டை சிலர் நகர்த்துகிறார்கள்.

எனவே, என்ன செய்யலாம்?

o நாம் அனைவரும் அல்லாஹ்வுடனான தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இக்லாஸ், ஐவேளை தொழுகை,திக்ர்,அவ்ராதுகள்,திலவதுல் குர்ஆன், தவக்குல், ஸப்ர்,முறாகபா என்பன முஸ்லிமின் பலமான ஆயுதங்களாகும்.

o முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள் தமக்கு மத்தியில் நிலவும் கருத்து பேதங்களை ஆர அமர அம்ர்ந்து பேசி தீர்த்துக் கொள்வதோடு தமக்கிடையில் பொறுப்புக்களை சிறப்பாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.ஒரே வேலையை பலர் செய்வது,முக்கியமான வேலைகளை யாருமே கவனிக்காமல் விடுவது,தமக்கு இயலாத வேலைகளில் ஈடுபடுவது,பொருத்தமானவர்கள் ஈடுபட முன்வரும் போது அவர்களுக்கு முட்டுக்கட்டை போடுவது,ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நல்லபணியொன்றைச் செய்யும் போது பிறர் ஒத்துழைப்பு நல்காமல் கைவிட்டு விடுவது ‘ஈகோ’வுக்காக பிறரை மட்டம் தட்டுவது போன்ற ஆறு தவறுகளும் இடம்பெற்று வருகின்றன. இவை தான் பல வகையான சமூக சீர்கேடுகளுக்கு காரணமாக அமைவதோடு பல பணிகள் மந்த கதியில் இடம் பெறுவதற்கும் பின்னணியில் உள்ளன.

o சிங்கள சகோதர்களது உள்ளங்களில் உள்ள சந்தேகங்களை அகற்ற மிக மிக தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.இதற்காக மீடியாவை உச்ச கட்ட மாகப் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

o தற்போதைய சூழல் உருவாகுவதற்கு முஸ்லிம்களது அன்றாட நடவடிக்கைகள் பெருமளவு காரணமாக அமைந்துள்ளன.எனவே அவர்கள் தமது மார்க்க வரம்புகளுக்கு வெளியே செல்லாமல் தமது வாழ்வொழுங்கை பண்பாடுகளை மையமாக வைத்து மறு சீரமைக்க வேண்டும்.

o கல்வித் துறையில் சிரேஷ்டமான இடங்களை நோக்கி சமூகத்தை நகர்த்த வேண்டும்.அது சதிகளை அறியவும் முறியடிக்கவும் தலைநிமிர்ந்து வாழவும் உதவும்.

o முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியில் உள்ள நல்லுள்ளம் படைத்தவர்களது சகவாசத்தை அதிகப்படுத்தி சமாதான சகவாழ்வைக் கட்டியெழுப்ப அவர்களுடன் இணைந்த உன்னதமான வேலைத் திட்டங்களை அமுலாக்க வேண்டும்.

o சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள பொறுப்பான பதவிகளில் இருக்கும் ஒவ்வொருவரும் தத்தமது பதவிகளும் பொறுப்புக்களும் அல்லாஹ்வால் தரப்பட்ட அமானிதங்கள் என்பதையும் அவற்றை சமூகம் வேண்டி நிற்கும் போது பயன்படுத்தாமல் இருப்பது மகா பெரிய துரோகம் என்பதையும் ஆழமாக உணர்ந்து செயற்பட வேண்டும்.பதவிகள்,பட்டங்கள்,பணம், அதிகாரம்,செல்வாகு,உடற்பலம் போன்றவற்றைப் பெற்றிருப்பவர்களுக்கு அவற்றைப் பெற்றில்லாதவர்களை விட அல்லாஹ்விடம் கேள்வி கணக்கு அதிகமாகும்.

அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக!நாட்டில் சுபீட்சமும் மனதில் நிம்மதியும் நிலவ அவனது அனுக்கிரகங்கள் எமக்குக் கிடைக்கட்டுமாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top