சகவாழ்வு என்ற பெயரில் நடப்பவை சரியானவையா?

அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி)

அண்மைக் காலத்தில்  முஸ்லிம்களிற் சிலர் உலமாக்கள் உட்பட  சமாதான சகவாழ்வை குறிக்கோளாகக்  கொண்டு பிற மதத்தவர்களது பிரத்தியேகமான சில கிரியைகளில் கூட ஈடுபடுகிறார்கள் என்ற விமர்சனம் பரவலாக முன்வைக்கப்படுகிறது.

இவை பற்றிய தெளிவை நாம் பெறுவதற்கு  பின்வரும் அம்சங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

  1. எமது உயிரிலும் மேலான இஸ்லாத்தில் உள்ள, எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்க முடியாத அம்சங்களை விட்டுக் கொடுக்க முடியாது.(தனித்துவம் பேணல்)
  2. மிகவுமே நிர்பந்தமான சூழ்நிலைகள் ஏற்பட்டால் விதிவிலக்குகள் உள்ளன.(ழரூராத் துபீஹுல் மஹ்ளூராத்)
  3. நாம் ஒரு சிறூபான்மை நாட்டில் வாழுவதனால் அனுசரிக்க வேண்டும் அல்லது முடியும் என்று எமது நவீன கால உலமாக்கள் பழைய கால உலமாக்களது கருதுக்களின் அடியாகவும் தமது ஆழமான அறிவின் அடியாகவும் வெளியுட்டுள்ள ஃபத்வாக்கள்.(பிக்ஹுல் அகல்லிய்யாத்)
  4. முஸ்லிம்களது தனித்துவங்களை முஸ்லிம்களும் பிறரும் அறிந்திருப்பதும் முஸ்லிம்கள் அவற்றை பின்பற்றுவதும் பிறர் அவற்றை மதிப்பதும் பின்பற்ற அனுமதிப்பதும்.(சகிப்புத்தன்மை)

இந்த நான்கு காரணிகளுள் நான்காவது காரணியிலிருந்து ஆரம்பிக்கலாம்

முஸ்லிம்களது தனித்தவங்களை பிறர் அறிந்திருப்பதும் மதிப்பதும்

இலங்கை வரலாற்றில் இனப்பிரச்சினையில் வளர்ச்சிக் கட்டங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற மூன்று இனத்தவரும் தமக்கிடையே மோதல்களில் ஈடுபட்டு பெரும் இரத்தக்களரிகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டமைக்கும் சகவாழ்வும் நல்லிணக்கமும் பாதிக்கப்பட்டமைக்கும் சிறுபான்மையினரது உணர்வுகள், தனித்துவங்கள்,நியாயமான மனித உரிமைகள் என்பவற்றை புரிந்து கொள்ளாமல் பெரும்பான்மையினர் நடந்து கொண்டமை அல்லது புரிந்திருந்தாலும் அவற்றை புறக்கணித்து அவர்களுக்கு நெருக்குதல்களை வழங்கியமை பிரதான காரணகும்;.

இதன் விளைவாகவும் இனப்பிரச்சினை தோன்றியிருக்கிறது. அது இலங்கை முஸ்லிம்கள், தமிழர்கள் ஆகிய இரு இனத்தவருக்கும் பொருந்தும் பொதுவான உண்மையாகும். சமாதான சகவாழ்வு எனும் போது அது, இரு கைகளும் சேர்ந்தாலே ஓசை எழுப்ப முடியும் என்பது போல பெரும்பான்மை சமூகத்தினதும் சிறுபான்மை சமூகங்களதும் ஒருமித்த பங்களிப்பு அதற்கு அவசியப்படுகிறது. சிறுபான்மையினர் சதாவும் சகவாழ்வு பற்றியும் சமய நல்லிணக்கம் பற்றியும் ஆய்வுகளைச் செய்து அவற்றில் கூடிய கவனமெடுத்து வாழும் போது பெரும்பான்மையினர் எவ்வித கட்டுப்பாடுகளையும் பேணாமல் சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கும் போது சகவாழ்வு சாத்தியப்படமாட்டாது. மறுபக்கத்தில் பெறும்பான்மையினர் சகலவித விட்டுக்கொடுப்புக்களையும் செய்து சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லுகையில் சிறுபான்மையினர் எல்லைமீறி உரிமைகளை அனுபவிப்பதும் பெரும்பான்மையினரது அடிப்படை உரிமைகள் கூட மீறப்படும் வகையில் நடந்து கொள்வதும் இனமுரண்பாடுகளுக்கும் யுத்தங்களுக்குமே வழிவகுக்கும்.

எனவே, பல்லின சமூகங்கள் கொண்ட நாட்டில் சகலரும் மிகவும் நிதானமாக சிந்தித்து தத்தமது கடமைகள், உரிமைகளை வரையறை செய்து பரஸ்பர நம்பிக்கையுடனும் புரிந்துணர்வுடனும் வாழுவது தான் சமாதான சகவாழ்வுக்கான ஏக வழியாக அமையும். அந்தவகையில் சிறுபான்மையினரான முஸ்லிம்களது தனித்துவங்களை பெரும்பான்மையினர் புரிந்து, அனுமதித்து நடப்பது இனமுறுவல் நிலைக்கான  முதல் தீர்வு என்பதால் முதலில் முஸ்லிம்களது தனித்துவங்கள் யாவை என்ற ஆய்வு முக்கியம் பெற வேண்டும்.

ஒரு தேசத்தில் வாழும் ஒவ்வோர் இனத்துக்கும் அது பெரும்பான்மையாகவோ சிறுபான்மையாகவோ இருந்தாலும் அதற்கு தனித்துவ அடையாளங்கள்(Ethnic Marker/ Symbol) இருக்கின்றன.அவற்றை வைத்தே அது இனம்காணப்படுவதுடன் அதன் நிலைபேறும் அவற்றிலேயே தங்கியிருக்கின்றது. அந்த தனித்துவ அடையாளங்களைப் பேணிப்பாதுகாக்க ஒவ்வோர் இனக்குழுமமும் (Ethnic Group) பாரிய தியாகங்களைச் செய்வதனால் அவை அதன் உணர்ச்சி பூர்வமான நிலையில் வைத்தே பேணப்படுகின்றன.

எனவே,சிறுபான்மையினராகவோ பெரும்பான்மையினராகவோ முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் எத்தகைய சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க முடியாத தனித்துவமான அம்சங்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு அல்லது கண்ணோட்டம் பற்றிய அறிவு அவசியமாகும் .

ஒரு முஸ்லிம் பின்பற்றும் இஸ்லாமிய மார்க்கம் சம்பூரணமான ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். அது நம்பிக்கைக் கோட்பாடுகள், கிரியைகள், வழிபாடுகள், தனிப்பட்ட ஒழுக்க விழுமியங்கள் போன்றன பற்றி மட்டும் பேசும் ஒரு மதமல்ல. ஒரு முஸ்லிம் கண்விழித்தது முதல் படுக்கையறைக்குச் செல்லும் வரையுள்ள நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள், வார்த்தைகள் நடத்தைகள், அனைத்தும் இஸ்லாமிய மயப்படுத்தப்பட்டதாக அமைய வேண்டும் என்பதே அல்லாஹ்வின் கட்டளையாகும். அல்லாஹ் ‘இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்’1 என்று கூறுகின்றனர்.

அல்லாஹ் இறக்கிய சட்டங்களை வைத்து தீர்ப்பளிக்காதவர்களும் அவ்வாறே அல்லாஹ் இறக்காத (மனித) சட்டங்களை தீர்ப்புக்களாக ஏற்பவர்களும் உண்மை விசுவாசிகளாகமாட்டார்கள்.2 என குர்ஆன் குறிப்பிடுவதிலிருந்து இந்த உண்மையின் ஆழத்தைப் புரிய முடிகிறது.

ஒருவர் குர்ஆனில் தனக்கு வசதியான பகுதிகளை பின்பற்றிவிட்டு வேறுசில பகுதிகளை விட்டுவிடுவது விட்டு விட்ட பகுதிகளை நிராகரிப்பதாகும். என வேறு ஓர் இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்.3

எனவே, வாரிசுரிமை, கடன், வட்டி, திருமணம் முடிக்க அனுமதிக்கப்படாதோர், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், சமாதானம், உழைக்கும் வழிகள், செலவு செய்யும் முறைகள் பற்றியெல்லாம் கூட இஸ்லாம் விரிவான சட்டங்களைத் தந்திருப்பதில் ஆச்சரியமில்லை. அந்தவகையில், தனிநபர், குடும்பம், சமூகம், அரசு, சர்வதேச உறவுகள் பற்றியெல்லாம் இஸ்லாம் பேசுவதன் மூலம் அதன் வழிகாட்டல் எல்லை மிக விசாலமானதாகும். குற்றவியல் சட்டங்கள் போன்ற வாழ்வின் சகலவித அம்சங்களோடு இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றினால் தான் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை இருப்பதால் ஒரு முஸ்லிம் எங்கு வாழ்ந்தாலும் விசுவாசிக்க வேண்டிய பகுதிகளை முழுமையாக ஏற்பதுடன் தன்னால் முடியுமான அனைத்து இஸ்லாமிய வழிகாட்டல்களையும் பின்பற்றுப்படியே பணிக்கப்பட்டுள்ளான்.

ஆனால், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் இஸ்லாத்தை முழுமையாக, அதன் பூரணமான வடிவில் நடைமுறைப்படுத்த முடியாது என்பது உண்மை தான். இந்நிலையில் ‘அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு அப்பால் நிர்ப்பந்திக்கப்படமாட்டான்’ ‘எனவே, அல்லாஹ்வை உங்களால் முடிந்த அளவு பயந்து கொள்ளுங்கள்’4 போன்ற குர்ஆனிய வசனங்களின் அடிப்படையில், சிறுபான்மை முஸ்லிம் நாடுகளில் இஸ்லாத்தை உயர்ந்தபட்சம் நடைமுறைப்படுத்த முயற்சிகளை எடுக்க வேண்டும்.

எது எப்படி இருப்பினும் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக மட்டுமன்றி சிறுபான்மையினராக வாழ்தாலும் கூட எந்நிலையிலும் விட்டுக்கொடுக்க முடியாத தனித்துவ அடையாளங்கள் பற்றி நாம் அறிந்திருப்பது அவசியமாகும்.

இலங்கையின் ஏனைய இனங்களைப் போலன்றி முஸ்லிம்கள் தமது மார்க்கமாகிய இஸ்லாத்தையே தமது தனித்துவ அடையாளமாகக் கணிக்கிறார்கள். அவர்களை இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகளும் அவற்றினடியாகத் தோன்றிய வாழ்வுமுறையுமே ஒருங்கிணைக்கின்றன. ஆனால், சிங்கள பௌத்தர்களையும் சிங்கள கிறிஸ்தவர்களையும் சிங்கள மொழி பிணைக்கிறது. அதேபோல் தமிழைப் பேசும் கிறிஸ்த்தவர்களையும் இந்துக்களையும் தமிழ் மொழியே ஒருங்கிணைக்கின்றது. இங்கு ‘மதம்’ என்ற பிணைப்பை விட ‘மொழி’ என்ற பிணைப்புக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. அதாவது, மொழியானது இனத்துவ அடையாளமாக (Ethnic Marker/ Symbol) ஆக இருந்து வருகிறது. மொழியின் மீது தீவிர பற்றுக் கொள்ளும் நிலைக்கும் அதற்காக உயிரையும் இழக்கத் தயாராகும் நிலைக்கும் அந்த அடையாளம் அவர்களிடம் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஆனால், முஸ்லிம்கள் மொழி ரீதியான தனித்துவத்தை நிராகரித்து, மதத்தை தமது அடிப்படை இனத்துவ அடையாளமாகத் தெரிவு செய்திருக்கிறார்கள் என கலாநிதி நுஃமான் கூறுகிறார்.5

ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் முஸ்லிம்களது தனித்துவ அடையாளத்தை விளக்க முயற்சிக்கையில், ‘சோனகர்களால் பேசப்படும் மொழி, அவர்களது வரலாறு, சமூக வழக்காறுகள், உடற்தோற்றங்கள் ஆகிய இவை அனைத்தும் தனித்தனியாகவோ அல்லது அவை அனைத்துமோ இன ரீதியில் முஸ்லிம்களும் தமிழர்கள் தான் என்று நிரூபிக்கமாட்டாது என்றார். 1880ம் ஆண்டில் பொன்னம்பலம் ராமநாதன், முஸ்லிம்கள் மொழிரீதியிலும் இரத்த உறவாலும் தமிழர்களே என்று கூறியதன் மூலம் சட்டநிரூபண சபையில் முஸ்லிம்களுக்கென வேறான பிரதிநிதித்துவமொன்று தேவை இல்லை என்று கூறினார். ‘On the Ethnology of Moors of Ceylon’ (இலங்கைச் சோனகரது இனச்சாயல் பற்றி) என்ற நூலை எழுதினார். தமிழர்களையும் முஸ்லிம்களையும் பாகுபடுத்திக்காட்டும் தனித்துவ அடையாளங்கள் இல்லை என்பது அவரது வாதமாக அமைந்தது. இக்கருத்துக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து பலத்த எதிர்புக் காட்டப்பட்டது. அந்த வேளையில் தான் ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ் அவர்கள் “A Criticism of Mr. Ramanatha’s Ethnology of the Moors of Ceylon” (இலங்கை முஸ்லிம்களது இனச்சாயல் பற்றிய திரு. ராமநாதனின் கருத்துக்கான விமர்சனம்) எனும் நூலை எழுதினார்.6

ஆகவே, முஸ்லிம்கள் எம்மொழியைப் பேசினாலும் எப்பிரதேசத்தில் வாழ்ந்தாலும் அவர்கள் தமது இஸ்லாம் மார்க்கத்தை முன்னிறுத்தியே தம்மை இனங்காட்டியிருக்கிறார்கள் என்பதை இதிலிருந்து புரிய முடிகிறது. அவர்களது பிரச்சினைகளை சரிவரப்புரிந்து கொள்ள முனையும், அவர்கள் இந்நாட்டில் பிற சமூகங்களோடு ஐக்கியமாகவும் நல்லினக்கத்தோடும் வாழவேண்டும் என விரும்பும் எவரும் இந்த அடிப்படை உண்மையைக் கவனத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தனித்துவம் காக்கவேண்டும் என்ற இந்த உணர்வு முஸ்லிம்களது வரலாற்றில் மிக ஆரம்பகால கட்டத்தில் இருந்தே இழையோடி இருந்திருக்கிறது.அந்த விடயத்தில் பிறர் தலையீடு செய்த வேளைகளில் எல்லாம் பிற சமூகங்களுடனான அவர்களது உறவுகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுவந்திருக்கிறது. முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்ற வகையில் மட்டுமன்றி அவர்களும் மனிதர்கள், இந்நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களில் இந்த உறவுகளில் மிகவுமே கடுமையான ஆட்ட அசைவுகள் உருவாகின.

தனித்துவம்காத்தலும் சகவாழ்வும்

எனவே,சகவாழ்வின் பொழுது முஸ்லிம்கள் தாண்டக் கூடாத வரம்புகள் பற்றிய சுருக்கமான விளக்கமொன்று இங்கு தரப்படுகிறது.

பன்மைத்துவ சமூகம் (Pluralistic Society) ஒன்றில் வாழும் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்களோடு  சகவாழ்வை மேற்கொள்ளும் போது தமது தனித்துவங்களை (Identities) பேணிக் கொள்ள முயற்சிப்பார்கள்.அவ்வாறு பேணுவது அவர்களது கடமையாகும். ஏனெனில், ஒரு சமூகம் அல்லது இனம் அதன் கலாசாரக் கூறுகளாலும் தனித்துவப் பண்புகளாலும் தான் இனம்காணப்படுகிறது. ஒவ்வொரு இனத்துக்கும் அல்லது சமூகத்துக்குமென பிரத்தியேகமான நம்பிக்கைக் கோட்பாடுகளும், பழக்க வழக்கங்களும், பண்பாட்டுக் கோலங்களும் காணப்படுகின்றன. அதனதன் உயிரோட்டமும் இருப்பும் அவற்றில் தான் தங்கியிருக்கிறது. உலகம் பூகோளக் கிராமமாக மாறி, புதிய உலக ஒழுங்கு ஒன்றின் கீழ் சகல சமூகங்களும் அணிதிரண்டு, தத்தமது வேறுபாடுகளை மறந்து, ஒன்றிணைய வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கிறது. எனவே பல சமுதாயங்கள் தமக்கென்றுள்ள தனித்துவங்களை மறந்து வேற்று நாகரிகங்களுடன் சங்கமித்துவிட்டன.

சகவாழ்வின் வரையறைகள்   

இது இவ்வாறிருக்க, சகவாழ்வை வலியுறுத்தும் இஸ்லாம், பிறரில் கரைந்து போகாமல் கலந்து வாழும்படியும் மூழுண்டு வாழாமல் தனித்துவம் பேணும்படியும் முஸ்லிம்களைப் பணிக்கிறது.7

கலாநிதி ஹாரிஸ் கூறும் போது:- ”கலந்து வாழ விரும்புகின்றவர்கள், தாம் கலந்து வாழ்கின்ற போது தம்முடைய இஸ்லாமியத்துவம், தமது தனித்துவம் கரைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இலங்கை வாழ் முஸ்லிம்கள் இவ்விடயத்தில் இரு வேறுபட்ட தீவிரப் போக்குகளைக் கொண்டுள்ளனர். ஒன்று அந்நிய சமூகங்களுடனான தொடர்பை முழுமையாகத் துண்டித்து ஒரு மூடிய, இறுக்கமான சமூகமாக வாழ முயற்சிக்கும் நிலை. இரண்டாவது அந்நியர்களுடன் எவ்வித வரையறைகளுமின்றி மிகவும் அன்யோன்யமாகப் பழகுகின்ற, தமது தனித்துவத்தை இழக்குமளவுக்கு நெருக்கமாக வாழ்கின்ற போக்கு. இது மிகவும் ஆபத்தானது.

இவ்விரு நிலைகளும் இஸ்லாத்துக்கு முரணானது. இரண்டுமே தீவிரமான போக்குகள். அந்நியர்களுடன் உறவு வைக்கலாம். அந்நியர்களோடு கலந்து வாழலாம். ஆனால், எமது ஈமானுக்கோ, இஸ்லாமிய நடைமுறைகளுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படாதவாறு மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். அவர்களுடனான உறவு மிகவும் கவனமான உறவாக அமைதல் வேண்டும். அவர்களுடடான உறவை வளர்க்கும்போது இஸ்லாமியப் பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், நடைமுறைகளினூடாக இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிதலை வழங்குதல் முதற்தர நோக்கமாகக் கொள்ளப்பட வேண்டும். மாற்றமாக, அவர்களுடன் இரண்டறக் கலந்து எமது தனித்துவத்தையும் இழக்குமளவுக்கு அவர்களின் மார்க்க அனுஷ்டானங்கள், கலாசார விழுமியங்களின் தாக்கத்துக்கு உட்படுவது மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல, இஸ்லாம் அனுமதிக்காத உறவுமாகும்.” 8 எனத் தெரிவிக்கிறார்.

முஸ்லிம்கள் பிறருடன் சகவாழ்வை மேற்கொள்ள முயற்சிக்கும் போது எந்நிலையிலும் தம்மால் தாண்ட முடியாத எல்லைகள் எவை, மார்க்கத்தின் அடிப்படைப் போதனைகள் எவை என்பதை அவர்கள் புரிந்திருப்பது அவசியமாகும். அதனைவிட முக்கியமாக, தம்முடன் முஸ்லிம்கள் சமாதான சகவாழ்வைப் பேணவேண்டும் என எதிர்பார்க்கும் முஸ்லிம் அல்லாதவர்களும் இவற்றைத் தெளிவாக அறிந்திருப்பது கட்டாயமாகும். அவ்வாறு பரஸ்பர புரிந்துணர்வும், தெளிவும் ஏற்படும் பட்சத்தில் முஸ்லிம்கள் தமது இரட்சகனை கோபப்படுத்தும் வகையிலான விட்டுக்கொடுப்புகளைச் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படுவதுடன், அவற்றைச் செய்யும்படி பிறரும் அவர்களை நிர்ப்பந்திக்கமாட்டார்கள்.

அந்தவகையில், முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அடையாளங்களாக இருக்கும் சில அம்சங்கள் பற்றி சுருக்கமாக அறிய வேண்டிய தேவை உள்ளது.

நம்பிக்கைக் கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், ஒழுக்கவிழுமியங்கள் என்பன எக்காலத்திலும் மாற்றத்திற்கு உட்படமாட்டாது; வளர்ச்சி காணமாட்டாது. அவற்றை முஸ்லிம் அல்லாதோர் விரும்பும் விதத்தில் சகவாழ்வு, சமய நல்லிணக்கம் என்ற பெயரில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்க முடியாது. இவற்றுடன் சேர்ந்து அரசியல், பொருளாதாரம், குடும்ப உறவு, பரஸ்பர உறவுகள் போன்ற துறைகளிலும் எவ்விதத்திலும் மாற்றத்திற்குள்ளாகாத அடிப்படையான போதனைகளும் உள. அவற்றை பின்வருமாறு பட்டியல்படுத்தலாம்:-

  1. நம்பிக்கை சார்ந்தவை

முழுப்பிரபஞ்சத்தையும் அதிலுள்ள மனிதர்கள் உட்பட அனைத்து படைப்பினங்களையும் படைத்து பரிபாலித்துவரும் இறைவன் ஒருவன் இருப்பதாகவும் அவனுக்கு இணை துணை ஏதும் இல்லையென்றும் நம்புவது முஸ்லிமின் அடிப்படையான கடமையாகும். இந்த உண்மைகளை மறுப்பது மிகப் பெரும் குற்றமாகும். எனவே, ‘ஏனைய மதங்களில் இருந்து இஸ்லாத்தை தனித்துவப்படுத்திக் காட்டும் அடையாளமாக (தௌஹீத்) ஏகத்துவத்தை இஸ்லாம் உண்டுபண்ணியிருக்கிறது. அவை சிலைவணக்கமுள்ள மதங்களாயினும் திரிபுக்கு உட்பட்ட வேதங்களைச் சார்ந்த மதங்களாயினும் சரியே. இஸ்லாம் ஏகத்துவ மார்க்கம் என்ற வகையில் இனம் காணப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் விலாசம் அதுதான். தௌஹீத் என்பது அல்லாஹ்வின் அந்தஸ்தில் எவரையும் வைத்து இரட்சகனாக மாற்றாதிருப்பது, அவனை மட்டுமே அதிகம் நேசிப்பது, அவன் இயற்றித்தந்த சட்டங்களை மட்டுமே பின்பற்றி நடப்பது09 போன்ற அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கிறது.10

அந்தவகையில், அல்லாஹ் அல்லாத படைப்பினங்களை உதவிக்காக அழைப்பது, அவற்றின் மீது சத்தியம் செய்வது, அவற்றுக்காக நேர்ச்சைவைப்பது, அறுத்துப்பலியிடுவது, மரங்களையோ கற்களையோ பூஜிப்பது, வலம்வருவது, தாயத்துக் கட்டுவது, குறிபார்ப்பது போன்றன இறைவனுக்கு இணைவைக்கும் செயல்களாகும்.11

அல்லாஹ் தனக்கு இணைவைப்பதனை மன்னிக்கமாட்டான். அவற்றைத் தவிரவுள்ளவற்றை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்’12 என்பது குர்ஆன் வசனமாகும். இந்தவிடயத்தில் விட்டுக்கொடுப்பதோ சமரசம் பேசுவதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள், குறைசிக் காபிர்களது சிலைகளை ஒரு வருடத்துக்கு வணங்கும்படி குறைஷpயர் வேண்டிக்கொண்டார்கள். அவர் அவ்வாறு செய்யும் பட்சத்தில் அவரது கடவுளை (அல்லாஹ்வை) ஒரு வருடத்துக்கு குறைஷியர் வணங்குவதாகவும் கூறினர். அப்போது தான் ‘சூரதுல் காபிரூன்’ எனப்படும் அல்குர்ஆனின் 109ம் வசனம் இறங்கியது என ஒரு கருத்து கூறப்படுகிறது.13

முஸ்லிம்கள் தமக்கென மார்க்கம் விதித்துள்ள நம்பிக்கைகளிலும் வழிபாடுகளிலும் உறுதியாக இருப்பதுடன் மாற்று மதத்தவர்களது நம்பிக்கைகளிலோ வழிபாடுகளிலோ சம்பந்தப்படாமலும், அவற்றிற்கு ஒத்தாசை புரியாமலும் இருப்பது அவசியமாகும். இதனை அனுசரித்து நடக்காத போது அது சமய நல்லிணக்கம் அன்றி பிறரில் கரைந்து விடுவதாகும்.( Assimilation)

சிறுபான்மை முஸ்லிம்கள் சகவாழ்வு, சமய நல்லிணக்கம், பெரும்பான்மையினரது அபிமானத்தை வெல்வது என்ற பெயர்களில் பெரும்பான்மைனருக்கென்றே தனித்துவமான நம்பிக்கைக் கோட்பாடுகளை ஏற்பதோ அல்லது அவர்களது வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதோ முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் அவ்வாறு ஈடுபடவேண்டும் என பெரும்பான்மையினர் நிர்ப்பந்திப்பது, அல்லது முஸ்லிம்கள் தாமாக அவ்வாறு செய்வது இரண்டும் தவறானதாகும். காரணம், இறை நிராகரிப்பு, பிறதெய்வ வணக்கம் என்பன இஸ்லாத்தில் கடுமையாகத் தடுக்கப்பட்டவையாகும்.

எனவே, பிற சமூகங்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பிலோ அல்லது அவர்களது சலுகைகளை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கிலோ முஸ்லிம்கள், அரசர்களது காலத்தில் விகாரைகளை நிர்மாணிக்கவும், அவற்றில் இடம்பெற்ற கிரியைகளைச் செய்யவும், பெரஹராக்களை நடாத்தவும் ஒத்தாசை புரிந்தமை மார்க்கத்தில் முற்றாகத் தடைசெய்யப்பட்டவையாகும்.

தற்காலத்தில் பௌத்த விகாரைகள் போன்ற வணக்கஸ்தலங்களை நிர்மாணிக்க அல்லது பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ மதங்களது வழிபாடுகளைச் செய்ய நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த முஸ்லிமும் உதவி செய்ய முடியாது. அந்த விடயத்துக்காக உதவிகளைப் பெற முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களை அணுகும்பட்சத்தில் மதநம்பிக்கைகள், வழிபாடுகள் என்பவற்றுடன் தொடர்பான அம்சங்கயில்  அன்றி, பொதுவாக பாதைகளை நிர்மாணிப்பது, ஆஸ்பத்திரிகளை அமைப்பது, ஏழைகளுக்கு உதவுவது போன்ற மனிதாபிமான விடயங்களுக்கு தாராளமாகவே உதவ முடியும். ஆனால், அவ்வாறு உதவ முடியாத மற்றும் உதவ முடியுமான பகுதிகளை முஸ்லிம்கள் அவர்களுக்கு நிதானமாக விளக்க வேண்டும்.14 அந்நிய மதத்தலங்களுக்குச் செல்வதோ மலர்த்தட்டுக்களை சுமந்து செல்வதோ இறைவிசுவாசத்தைப் பாதிப்பதாக அமையும்.

அதேபோல் பிறசமயத்தவர் தமது வழிபாடுகளைச் செய்ய ஒரு முஸ்லிம் உடந்தையாக இருக்கக் கூடாது.இமாம் இப்னு தைமிய்யா கூறுகையில் ‘முஸ்லிமல்லாதவர்கள் தமது பெருநாட்களை கொண்டாடப் பயன்படுத்தும் உணவு, ஆடைகள், துளசி போன்றவற்றை அவர்களுக்கு விற்பதோ அல்லது அன்பளிப்பாக வழங்குவதோ அவர்களது பிழையான பெருநாட்களை நடாத்த உதவி செய்வதாக அமையும். மேலும், காபிர்கள் மது குடிப்பதற்கு பயன்படுத்தும் திராட்சையை அல்லது பழச்சாற்றை அவர்களுக்கு விற்பதும் கூடாது.  அவர்கள் முஸ்லிம்களுக்கெதிராகப் பயன்படுத்தும் ஆயுதங்களை அவர்களுக்கு விற்கலாகாது’ என எழுதுகிறார்.15

மொழியைப் பொறுத்தவரையில் கூட இந்த தனித்துவ சிந்தனை கவனிக்கப்படுகிறது.அடிப்படையில் முஸ்லிம்களது மொழி அரபாக இருப்பதால் சந்தர்ப்பவசத்தால் அவர்கள் வேற்று மொழிகளைத் தமது தாய் மொழியாகக் கொள்ளும் நிர்ப்பந்தம் எழும்பட்சத்தில் அந்த அந்த மொழிகளிலுள்ள இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கு விரோதமான சொற்களை தவிர்ப்பது அவசியமாகும். அந்தவகையில் தான் இந்து சமயப் பின்னணியில் தோன்றிய சில சொற்களை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும் என ஏ.எம்.ஏ அஸீஸ் தெரிவித்தார். அவதரித்தல்,  காட்சியளித்தல், இரண்டரக் கலத்தல் போன்ற பதங்களை அல்லாஹ் பற்றிப் பேசும் போது பிரயோகிப்பது (தௌஹீத்) இஸ்லாமிய ஏக தெய்வக் கொள்கையோடு முரணாகும் என்றார்.16 அவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாக் கொண்டவராக இருந்தும் தமிழர்களுக்கும் அவருக்கும் நெருக்கமான உறவிருந்தும் கூட மொழி ரீதியில் கூட தனித்துவம் உண்டு என்பதை அவர் நிரூபித்தார்.

  1.  பெரும் பாவங்கள்

மனிதர்கள் இழைக்கும் குற்றச் செயல்களுள் ‘கபாஇர்’ எனப்படும் பெரும்பாவங்கள் பாரதூரமானவை. அவற்றில் ஈடுபடுபவர் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உள்ளாகுவதோடு மறுமையில் நரகில் நுழைவதுடன் உலகிலும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார். நபி(ஸல்) அவர்கள் அவற்றைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அவற்றில் இணைவைப்பது, கொலை, சூனியம், வட்டி, அநாதைகளது சொத்துக்களை சட்டத்திற்குப் புறம்பாக அனுபவிப்பது, வீண்பழி சுமத்துவது, பெற்றோரைத் துன்புறுத்துவது, இனபந்துக்களது உறவை துண்டிப்பது, பொய்சாட்சியம் கூறுவது, மது அருந்துவது, விபசாரம் செய்வது, தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற கடமைகளில் ஈடுபடாதிருப்பது போன்றன குறிப்பிடத்தக்கவையாகும்.17 இவற்றிலும் எவ்வித விட்டுக்கொடுப்புகளையும் செய்ய முடியாது.முஸ்லிம்கள் தமக்கென வட்டியில்லா வங்கிகளை அமைத்துக்கொள்வதற்கு முயற்சிகளை எடுப்பதற்கு இதுதான் காரணமாகும்.

  1. இஸ்லாமிய சட்டவியலின் சில அம்சங்கள்

இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டமாகும். இது இப்படியிருக்க, முஸ்லிமல்லாத நாடுகளில் முஸ்லிம்கள் செய்ய வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படும் சில பாவச்செயல்களையும், அவர்கள் செய்வதற்கு தடைவிதிக்கப்படும் மார்க்கத்தின் சில கட்டாயக் கடமைகளையும் இங்கு எடுத்துக்காட்டாக நோக்க முடியும்.

உதாரணமாக, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது கடமை என்பது இஸ்லாத்தின் அடிப்படையான சட்டவிதிகளில் ஒன்றாகும்.18 அப்படியிருந்தும் அவ்வுரிமையைப் பறிக்க பிரான்ஸிய அரசு முனைந்துள்ளது.இலங்கையிலும் இது சம்பந்தமான சர்ச்சைகள் முஸ்லிம் அல்லாத சிலரால் எழுப்பப்பட்டு வருவது கண்கூடு. மேலும், எத்தகைய சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின் பெயர் கூறப்படாது அறுக்கப்பட்ட மிருகங்களது இறைச்சியை ஒரு முஸ்லிம் உண்ண அனுமதிக்கப்படவில்லை. ‘இணைவைப்பவரால் அல்லது இறைநிராகரிப்பாளரால் அறுக்கப்பட்ட மிருகத்தின் இறைச்சி ‘ஹராம்’ என்பது ‘இஜ்மாஉ’ (சகல இஸ்லாமிய அறிஞர்களதும் ஏகோபித்த) முடிவாகும்.19 ஏனெனில், அல்லாஹ் ‘அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாதவற்றை புசிக்காதீர்கள்’20 என்று கூறியுள்ளான்.எனவே தான்  ஹலாலான(இஸ்லாம் கூறிய) முறைப்படி இறைச்சிக்காக மிருகங்கள் அறுக்கப்பட்டால் மாத்திரமே தம்மால் அவ்விறைச்சியை சாப்பிட முடியும் என்பதால் இலங்கை முஸ்லிம்கள் ஹலால் சான்றிதழ் விடமாக கூடிய கரிசனை எடுத்தார்கள்.

மேலும், ‘முஸ்ரிக்’ஆன ஆனால், அஹ்லுல் கிதாபுகளைச் சாராத பெண்களை முஸ்லிம் ஆண்கள் மணமுடிப்பது ஹராம் என்பதில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடு கிடையாது.21 நெருப்பு, நற்சத்திரங்கள் என்பவற்றை வணங்கும் பெண்களும் நாஸ்திக, கம்யூனிஸ, ஹிந்து, பௌத்த, காதியானி, பஹாஈ, பாதினீ ஆகிய கொள்கையைப் பின்பற்றும் பெண்களும் இந்த வகையில் அடங்குவர்.22

ஆனால், முஸ்லிமல்லாத ஆணை அவர் அஹ்லுல் கிதாபைச் சார்ந்தவராகவோ சிலைவணங்கும் முஷ்ரிகாகவோ இருப்பினும் முஸ்லிமான பெண் மணமுடிப்பது கூடாது என்பது சகல சட்டவல்லுனர்களதும் ‘இஜ்மாஉ’ ஆன முடிவாகும்.23 அவ்வாறு திருமணம் நடந்து முடிந்து விட்டால் அது செல்லுபடியாகாது. உடலுறவு நடந்தால் அது விபசாரமாகக் கருதப்படும். குழந்தை பிறந்தால் அது அந்த ஆணின் பரம்பரைக்குரியதாகக் கணிக்கப்படமாட்டாது. அந்த சோடிகள் இருவரையும் பிரித்து வைக்க உடனடி நடவடிக்கை எடுப்பது முஸ்லிம்களது கடமையாகும். அப்பெண் ‘இத்தா’ இருக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் அந்த திருமண உறவு செல்லுபடியற்றதாகும்.24

இறுதியாக

அண்மை காலங்களில் சமாதான சக வாழ்வை அடையும் நோக்கில் முஸ்லிம்களிற் சிலர் பிற மத கிரியைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படும் செய்திகளை மீடியாக்கள் வாயிலாக அறிந்து கொள்கிறோம். இவ்வளவு தூரம் முஸ்லிம்கள் இறங்கிப் போக வேண்டும் என்று நிச்சயமாக முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் கூட எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் நாம் ஏன் அவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பது தான் மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. ஒன்றில் சரணாகதியாய் இருக்கலாம்.அல்லது பயமாக இருக்கலாம். அல்லது இஸ்லாம் பற்றிய அறிவீனமாக இருக்கலாம்.

அவர்களது மனங்களை வெல்ல வேண்டுமாயின் இப்படி நடப்பது அவசியம்  என்று நினைக்கலாகாது. அல்லாஹ்வை கோபித்துக் கொண்டு மனிதர்களை திருப்தி படுத்த முடியாது என்பதை உறுதியாக மனதிற் கொள்ள வேண்டும். சிலபோது பிறசமயத்தவர்கள் தமது மதம் அல்லாத வேறு மதங்களது வழிபாடுகளையும் தமது வழிபாடுகளோடு சேர்த்து செய்வார்கள். அதனை ஒரு பொருட்டாக அவர்கள் கொள்ள மாட்டார்கள். அது பற்றிய கடுமையான கட்டளைகள் அம்மதங்களில் வந்திருக்கமாட்டாது. அதற்கு அவர்களிடம் உள்ள மத நம்பிக்கைகளது தன்மை ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் நாம் பின்பற்றுகின்ற இஸ்லாம் மார்க்கத்தில் நம்பிக்கை கோட்பாடுகள், இபாதத்கள், ஹலால், ஹாலாம் வரையறைகள் தொடர்பான மிகவும் தெளிவான ஆணித்தரமான கட்டளைகள் வந்திருக்கின்றன. அவற்றை மீறும் ஒரு முஸ்லிம் இஸ்லாத்தின் வரம்புகளை விட்டு வெளியே செல்கின்ற வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.அது ஒவ்வொரு செயல்பாட்டினதும் பாரதூரத்தைப் பொறுத்தது.

எனவே எமக்கும் அவர்களுக்கும் இடையிலான வரம்புகள், வரையறைகளை கட்டாயம் நாம் பேணிக்கொள்வதோடு உலக வாழ்க்கையின் பொதுக் காரியங்களில், வியாபாரம், கொடுக்கல் வாங்கல்கள் அயல்வீட்டார் உறவுகள், சமூக உறவுகள் போன்ற விடயங்களில் மிகவும் உயர்ந்த இஸ்லாமிய பண்பாடுகளை அவர்களுக்கு நாம் காட்ட முடியும். பிற சமயத்தவர்களுடனான உறவுகளின் போது அதனைத் தான் இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. முஸ்லிம் அல்லாதவர்களும் எம்மிடமிருந்து அதனைத் தான் எதிர்பார்க்கிறார்கள்.நாம் பிற சமயத்தவர்களது கிரியைகளில் சம்பந்தப்படுவதை விடவும்

  1. 1. வியாபாரத்தில் நியாயமானவர்களாக,
  2. உண்மை பேசுபவர்களாக,
  3. சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பவர்களாக,
  4. அரசியலில் நீதி நியாயத்துக்கு மாத்திரம் ஒத்துழைப்பவர்களாக
  5. அடிப்படை மனித விழுமியங்களைப் பேணூபவர்களாக
  6. நாட்டைக் கட்டியெழுப்ப்புபவர்களாக

என்றெல்லாம் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால் நாம் அவற்றை செய்யாமல் இப்படியான காரியங்களில் ஈடுபடுவது என்பது தலைகீழான முறைமையாகும்.

முஸ்லிம் அல்லாதவர்களோடு பகைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கட்டுரை எழுதப்பட்டது அல்ல என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மாறாக எமது சமய கலாசார தனித்துவங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை புரிவதற்கான முயற்சியாகும். அவர்களுடைய மார்க்கம் அவர்களுக்குரியது எமது மார்க்கம் எமக்குரியது.”லகும் தீனுகும் வலிய தீன்”.

நம்பிக்கை கோட்பாடுகள்(அகீதா), வணக்க வழிபாடுகள் (இபாதா)அன்றாட வாழ்வோடு சம்பந்தப்பட்ட ஷரீஆவின் சட்டதிட்டங்கள்(ஹலால்- ஹராம்) என்பவற்றில் நாம் அவர்களோடு இணைய முடியாது என்பது மிகத் தெளிவான உண்மையாகும்.

எனவே இந்த உண்மைகளை புரிந்த நிலையில் தனித்துவத்தைப் பேணி சமாதான சகவாழ்வை மேற்கொள்வதற்கு நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

உசாத்துணைகள்

  1. அல்குர்ஆன் 2:208
  2. அல்குர்ஆன் 5:44, 4:60
  3. அல்குர்ஆன், 2: 85, 4: 150,151
  4. அல்குர்ஆன் 2: 286, 64: 16
  5. Nuhman, A., Understanding Sri Lankan Muslim Identity, pp., 10, 11
  6. மேலது
  7.  ரவூஸ் ஸைன், பன்மைத்துவ சமூகமொன்றில் தனித்துவம் பேணி வாழல், றாபிதா(சஞ்சிகை), பக்கம் – 55,56
  8. எச்.எல்.எம்.ஹாரிஸ், சகவாழ்வு, சாத்தியப்படுத்துவதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும், பக்: 34,35
  9. யூசுப் அல்கர்ளாவீ, ஹகீகதுத் தௌஹீத், பக்கம் – 30-38
  10.  இது தொடர்பான அல்குர்ஆன் வசனங்களாவன:- சூராஅல்அன்ஆம் – 164,14, சூராஆலஇம்ரான் – 64, சூராஅல்பகரா – 165,சூராஅஷ;ஷ{ரா – 9,சூராஅல்அன்ஆம் – 114, சூராஅந்நிஸாஉ – 60-61, சூரா யூசுப் – 40
  11. மேலதிக விளக்கங்களுக்குப் பார்க்க, ஹகீகதுத் தௌஹீத், பக்கங்கள் – 51,74,75
  12. அல்குர்ஆன், சூராஅந்நிஸாஉ – 48
  13. தப்ஸீர் இப்னு கதீர், பாகம் – 04, பக்கம் – 3107
  14.   அல்ஹாஜ் நளீம் அவர்களிடம் வந்த சில பௌத்தர்கள் தமது பன்சலவைக் கட்ட பண உதவி செய்யும்படி வேண்டிக்கொள்ளும் போது எவ்வாறு நடந்து கொள்வது என அவர் மௌலவி ஏ.எல்.எம்.இப்றாஹீம் அவர்களிடம் ஆலோசனை கேட்டார்கள்.அப்போது இத்தகைய தீர்ப்பையே தான் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.(பேட்டித் திகதி10-11-2006)
  15. இப்னுதைமியா, இக்திளாஉஸ் ஸிராதில் முஸ்தகீம், பக்கம் – 520
  16. நஹியா, ஏ.எம். அஸீசும் தமிழும், பக் : 51
  17.  மேலதிக விளக்கங்களுக்கு, கர்ளாவீ, பீ பிக்ஹில் அவ்லவிய்யாத், பக்கம்- 148-150
  18.  அல்குர்ஆன், சூராஅந்நூர் – 31
  19. முக்னீ, பாகம் – 08, பக்கம் – 57, பதாயிஉ, பாகம் – 06, பக்கம் – 2776, பிதாயதுல் முஜ்தஹித், பாகம் – 01, பக்கம் – 449, முஹல்லா, பாகம் – 07, பக்கம் – 405
  20. அல்குர்ஆன், சூராஅல்அன்ஆம் – 151
  21. முக்னீ, பாகம் – 6, பக்கம் – 476, பிதாயதுல் முஜ்தஹித், பாகம் – 02, பக்கம் – 44, முஹல்லா, பாகம் 09, பக்கம் – 448
  22. அல்அஹ்காமுல் பிக்ஹிய்யா லில்அகல்லிய்யாதில் முஸ்லிமா, நயீம், பக்கம் – 241
  23. அல்உம்மு, பாகம் – 05, பக்கம் – 05, பதாயிஉ, பாகம் – 2, பக்கம் – 500-501, முஹல்லா, பாகம் – 09, பக்கம் – 44, முக்னீ, பாகம் – 06,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top