அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல்
துறை சார் நிபுணர்கள், உயர் கல்வித் தகைமைகளை பெற்றவர்கள், உயர் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள், சமூகத்தில் பெயரோடும் புகழோடும் அந்தஸ்துக்களோடும் இருப்பவர்கள் ஆகியவர்களுக்கு பொறுப்புகளும் கடமைகளும் அதிகம்.
இவர்களிடத்தில் அல்லாஹ் நிச்சயமாக சமூகத்தின் உயர்ச்சிக்காக உலகத்தில் வாழ்கின்ற போது என்ன செய்தீர்கள்? என்ன தியாகத்தை மேற்கொண்டீர்கள் என்று அதிகமாக விசாரிப்பான். அதில் சந்தேகமே கிடையாது. ஒருவருக்கு திறமைகள், பதவிகள், அதிகமாக இருக்கும் அளவுக்கு அல்லாஹ்விடம் அவருக்கு கேள்வி கணக்கு/விசாரணை அதிகம். திறமைகள், வாய்ப்புக்கள், குறைவாக இருக்கும் அளவுக்கு விசாரணையும் குறைவாக இருக்கும்.
ஒருவரது திறமைகள் பதவிகள் பட்டங்கள் அனைத்தும் அல்லாஹ்வால் அவருக்கு வழங்கப்பட்ட பாக்கியங்களாகும். அந்த பாக்கியங்கள் அனைத்தும் அமானிதங்கள். இந்த அமானிதங்களை அல்லாஹ் ஒருவருக்கு வழங்கியிருப்பது அவற்றை வைத்து அவர் பெருமைப்படுவதற்கோ வெறுமனே தானும் தனது குடும்பமும் தொழிலும் அந்தஸ்துமென்று வாழ்ந்து விட்டு போவதற்கோ அல்ல. அவர் தனது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதோடு சமூக கடமைகளிலும் ஈடுபட்டு இருக்க வேண்டும்.
إِنَّ ٱللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّواْ ٱلْأَمَٰنَٰتِ إِلَىٰٓ أَهْلِهَا وَإِذَا حَكَمْتُم بَيْنَ ٱلنَّاسِ أَن تَحْكُمُواْ بِٱلْعَدْلِ ۚ
“நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும் மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்” எனவே எமக்கு அல்லாஹ் தந்த அனைத்து பாக்கியங்களையும் சமூகத்தின் உயர்சிக்காகப் பயன்படுத்த வேண்டும்.
இன்று சமூகம் மிகவும் கவலைக்கிடமான, பரிதாபிகாரமான நிலையில் இருக்கிறது. இந்நிலையில் ஒருவர் சுயநலமியாக, தன்னைப் பற்றி மாத்திரம் யோசித்துக் கொண்டு வாழுவாராயின் அவரைவிட மோசமானவர் யாருமில்லை.
எனவே பணம், அறிவு, உடலாரோக்கியம், செல்வாக்கு, அதிகாரம், பட்டங்கள், பதவிகள் என்பவற்றை பெற்றிருப்போர் நாளை மறுமையில் அல்லாஹ்வின் கடுமையான விசாரணையில் இருந்து தப்ப வேண்டுமாயின் அவர்கள் உலகில் தமக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் முகமாக அவற்றை சமூகத்தின் எழுச்சிக்காக பயன்படுத்தியே ஆக வேண்டும்.
இன்னும் சிலரோ தமக்கு கிடைத்திருப்பவற்றை துஷ்பிரயோகம் செய்து பிழையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் துரோகம் தான்.
சமூகத்தின் வீழ்ச்சிக்கும் பலவீனத்திற்கும் பின்னடைவுக்கும் மிக முக்கியமான காரணம் சுயநலமாகும். கஞ்சத்தனம், கோழைத்தனம், சுயநலம், என்பன முஸ்லிமிடம் இருக்கவே கூடாத பண்புகளாகும்.
: لَن تَنَالُواْ ٱلْبِرَّ حَتَّىٰ تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَ ۚ وَمَا تُنفِقُواْ مِن شَىْءٍۢ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ
“நீங்கள் நேசிப்பவற்றிலிருந்து நீங்கள் செலவுசெய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்” என்ற குர்ஆன் வசனத்தின் படி நாம் விரும்பும் நேசிக்கும் விடயங்களை தியாகம் செய்யும் வரை சுவர்க்கத்தையும் அல்லாஹ்வின் அருளையும் அடைந்து கொள்ள முடியாது.
ألا إنَّ سلعةَ اللَّهِ غاليةٌ ، ألا إنَّ سلعةَ اللَّهِ الجنَّةُ
أخرجه الترمذي (2450)
“அல்லாஹ்வின் வியாபாரப் பண்டம் விலை கூடியது. அல்லாஹ்வின் வியாபாரக் பண்டம் சுவர்க்கமாகும்” என்ற ஹதீஸின் அடிப்படையில் பார்த்தால் சிறிய சிறிய தியாகங்களால் சுவர்க்கம் என்ற அந்த உயர்ந்த இடத்திற்கு போக முடியாது. பெரிய தியாகங்களைச் செய்தால் தான் அந்த இடத்தை அடைய முடியும் . வியாபாரப் பண்டத்தின் பெறுமதியின் அளவுக்கு அதனை அடைவதற்கான முயற்சியும் தேவை.
ஒருவர் தான் சமூகப் பணி செய்யப் போனால் எதிர்ப்பு வரும் அல்லது ஏதும் ஆபத்துக்கள் வந்து விடும் என்று பயந்து ஒதுங்கி தானும் தன் பாடும் என்றிருந்தால் அவர் அல்லாஹ்வின் பலமான தண்டனைக்கு உள்ளாகுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சுவர்க்கத்தை அடைய வேண்டுமாயின் தியாகங்கள் தேவை.
: أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُواْ ٱلْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ ٱلَّذِينَ خَلَوْاْ مِن قَبْلِكُم ۖ مَّسَّتْهُمُ ٱلْبَأْسَآءُ وَٱلضَّرَّآءُ وَزُلْزِلُواْ حَتَّىٰ يَقُولَ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ مَتَىٰ نَصْرُ ٱللَّهِ ۗ أَلَآ إِنَّ نَصْرَ ٱللَّهِ قَرِيبٌ
“உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமை பிணி போன்ற கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன ‘அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது’ என்று நாம் ஆறுதல் கூறினோம்” என்று அல்லாஹ் கூறுகிறான்.
எனவே மெழுகுவர்த்தி தன்னை உருக்கியே தன்னைச் சூழ உள்ளவர்களுக்கு வெளிச்சம் கொடுக்க வேண்டும். எந்த ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தின் பின்னாலும் பல்வேறு பட்ட தியாகங்கள் இருப்பதை கண்டு கொள்ள முடியும்.
இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கும் இந்த உண்மை பொருத்தம். பொது மக்களை விடவும் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் இது விடயமாக கூடிய கவனமெடுக்க வேண்டும்.




