பாலஸ்தீன் மக்களுக்கான எமது கடமைகள்

அஷ்ஷைக் பளீல் (நளீமி)

உடனடியாக செய்ய வேண்டியவை:

1. தொழுகைகளின் போதும் அவற்றின் பின்னரும் சாதாரண நேரங்களிலும் நோன்பு திறக்கும் பொழுதும் அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும்.

2. ஒவ்வொரு தொழுகையிலும் குனூத் ஓதலாம்

எப்போதும் செய்ய வேண்டியவை:-

3. பாலஸ்தீன வரலாற்றை எவ்வித திரிபுகழும் இல்லாமல் நடுநிலையாக இருந்து படிக்கலாம்.

4. அந்தப் பூமி எவ்வளவு அருள்பாளிக்கப்பட்டது என்பதை குர்ஆன் ஹதீஸ் வசனங்களின் ஊடாகவும் அங்கு இடம்பெறும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஹதீஸ்களில் வந்திருக்கின்ற முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் படிக்கலாம்.

5. எமது தப்ஸீர் விளக்கங்களில் ‘இஸ்ராயீலிய்யாத்’துகளை முற்று முழுதாக தவிர்க்கலாம்.

6. தற்கால உலகில் முஸ்லிம்களின் முதல்தர எதிரியான – பாலஸ்தீனத்தின் எதிரிகளது உற்பத்திகளை புறக்கணித்து எமது நாட்டின் உற்பத்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.

7. உலகில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான சிந்தனைப் படையெடுப்பு அரங்கேறி வருகிறது. குறிப்பாக இஸ்லாத்தின் எதிரிகளது நாஸ்திகவாத, சடவாத சுயநல, இன்ப நுகர்ச்சி இலக்கு கொண்ட இராட்சத தொடர்பு சாதனங்கள் வாயிலாக மிகப் பிரமாண்டமான ஊடகவியல் யுத்தமொன்று பல வகையான தொடர்பு சாதனங்கள் வாயிலாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலஸ்தீன விவகாரத்திலும் பல உண்மைகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையை எதிர்கொள்ள முஸ்லிம்கள் மீடியா உலகில் கால் பதிக்க வேண்டும். உலகில் உள்ள நடுநிலையாக, நியாயமாக சிந்திக்கும் முஸ்லிம் அல்லாத பல தனிமனிதர்களும் நிறுவனங்களும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல், நடுநிலையாக சிந்தித்து மீடியாக உலகில் பிரகாசிக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து இந்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் பின் தாபித் (ரழி) போன்ற கவிஞர்களை தமது தூதைப் பலப்படுத்த பயன்படுத்தியதை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

7. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் மனித இனத்திற்கும் வெற்றியும் விமோசனமும் கிடைக்க வேண்டுமாயின் நாம் கடைபிடித்தே ஆகவேண்டும் என அல்லாஹ்வும் ரஸூல் (ஸல்) அவர்களும் கூறிய நியதிகளை, நிபந்தனைகளை நாம் தெரிந்து கொண்டு அவற்றிற்கு ஏற்ப எமது வாழ்க்கையை ஒழுங்குபடுத்த வேண்டும்.

அந்த நிபந்தனைகளிற் சில:

அ. ஆழமான தெளிந்த ஈமான்

ஆ. முஸ்லிம் சமூகத்தின் ஐக்கியமும் பரஸ்பர விசுவாசமும்

இ. இஸ்லாம் பற்றிய தெளிந்த அறிவும் அதனை பின்பற்றுவதும்

ஈ. அவ்வக்காலத்தில் உள்ள அறிவு ஞானங்களை துறைபோகக் கற்பதும் அவற்றில் ஈடுபாடு காட்டுவதும்.

உ. முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டுப் பலம்

வல்லவன் அல்லாஹ் அவனது கருணையால் எம்மை அரவணைத்து பாலஸ்தீன மக்களுக்கு ஒளிமயமான, கெளரவமான வாழ்வைக் கொடுப்பானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top