களா நோன்பும் பித்யாவும்

அஷ்ஷெய்க் பளீல்

நியாயமான காரணங்களுக்காக நோன்பை விட்டவர்கள்:

ரமலான் காலத்தில் நோன்பு நோற்க முடியாத நிலையில் இருந்து நோன்பை விட்டவர்களான பிரயாணிகள், கடுமையான நோயாளிகள், ஹைள், நிபாஸ் உடன் இருந்த பெண்கள் போன்றோர் தாம் விட்ட நோன்புகளை கணக்கிட்டு ரமழான் அல்லாத காலங்களில் #களாச் செய்து கொள்ள வேண்டும்.

ஆனால் நிரந்தர நோயாளிகளாக இருந்து நோன்பை விட்டவர்களும் நோன்பே நோற்க முடியாமல் உடல் நலவுற்ற நிலையில் இருந்த வயோதிபர்களும் எப்படியுமே களாச் செய்ய முடியாது. அவர்கள் தாம் நோற்கத் தவறிய ஒவ்வொரு நோன்புக்கும் #பித்யா தலா ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

கர்ப்பவதிகளும் பாலூட்டுவோரும் களா செய்வதா ‘பித்யா’ கொடுப்பதா?

குழந்தைக்கு பாலூட்டும் தாய்மாரும் கர்ப்பவதிகளும் ரமலான் காலத்தில் அடிப்படையில் நோன்பு பிடிக்க வேண்டும். ஆனால், அவர்களது உடல்நிலை பலவீனமாக இருந்தால் வைத்தியரின் ஆலோசனையின் பேரில் அவர்கள் நோன்பை விட அனுமதியுண்டு. அவ்வாறு விட்டால் அவர்கள் ஏனைய காலங்களில் ‘களா’ செய்வது தான் அடிப்படையாகும்.

கர்ப்பவதிகளாக இருப்போரும் பாலூட்டும் தாய்மாரும் தாம் விட்ட நோன்புகளுக்காக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் இமாம்களுக்கு மத்தியில் நிலவுகின்றன.

முதலாவது கருத்து:-

அவர்கள் களா செய்வதுடன் பித்யாவும் கொடுக்க வேண்டும்.

இரண்டாம் கருத்து:-

களா செய்வது மாத்திரம் போதுமானது. இது பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.

மூன்றாவது கருத்து:-

‘பித்யா’வை மட்டும் கொடுத்தால் போதுமானது. இது இப்னு அப்பாஸ் (ரழி), இப்னு உமர்(ரழி), சஈத் இப்னு ஜுபைர் போன்றவர்களுடைய கருத்தாகும்.

ஆனால் அடிக்கடி ஒவ்வொரு வருடமும் குழந்தை பெறுவோர் மட்டுமே ‘பித்யா’ மட்டும் கொடுத்தல் எனும் சலுகையைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.இந்த வருடம் கர்ப்பம் தரித்திருந்தவர்கள் அடுத்த வருடம் பாலூட்டுவார்களாயின் அவர்களுக்கு தொடர்ந்து நோன்பதற்கோ களாச் செய்வதற்கோ முடியாத நிலை தான் இருக்கும். அப்படி அடிக்கடி பிள்ளை பெற்றுக் கொள்வோருக்கு களா செய்வது கஷ்டமாக இருந்தால் அவர்கள் பித்யா மட்டும் கொடுத்தால் போதுமானது.

ஆனால் ‘களா’ செய்வதற்கான அவகாமும் உடல் வலிமையும் இருந்தால் களா செய்வதே பொருத்தமாகும். உதாரணமாக, கர்ப்பம் தரித்த ஆரம்ப நாட்களில் தொடர்ந்து வாந்தி வருவது போன்ற அசௌகரியங்கள் இருந்தால் நோன்பிருப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனால், இத்தகைய கர்ப்பிணிகளைப் பொருத்தவரையில் ஓரிரு மாதங்கள் சென்ற பின்னர் அவர்களுக்கு நோன்பு பிடிக்க முடியுமாக இருக்கும். அல்லது பிள்ளை பிறந்து சுமார் ஆறு மாதங்கள் சென்ற பின்னர் தாய்ப்பாலுடன் பிற ஆகாரங்களையும் பிள்ளைக்கு கொடுக்க முடியும் என்பதால் தாய்க்கு நோன்பு பிடிப்பது கஷ்டமாக இருக்காது. எனவே அவர்கள் நோன்பு பிடிப்பதே நல்லது.

#பித்யாவை எப்படி கொடுப்பது?

பித்யா என்பது வெறுமனே அரிசியாக அமையாமல் உணவு (தஆமு மிஸ்கீன்) என்ற பெயருக்கு ஏற்றாற் போல் அமைதல் பொருத்தமாகும்.அதாவது, ஒரு வேளைக்கு ஒரு நேரத்துக்கு ஒருவர் உண்ண முடியுமான முழுமையான உணவாகிய அரிசியுடன் அதற்கான கறியையும் சேர்த்தே கொடுப்பது நல்லது. சமைக்காமல் இவ்வாறு கொடுப்பதில் சிரமம் இருக்கலாம். அப்படியாயின் சமைத்து பார்சலாக கொடுக்கலாம். அல்லது ஏழைகளை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்கலாம்.

நோன்பு பிடிக்க முடியாத வயது முதிர்ந்த நிலையில் இருந்த அனஸ்(ரலி) அவர்கள் ஏழைகளை வீட்டுக்கு அழைத்து பித்யா உணவைக் கொடுத்திருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அல்லது சமைத்த உணவை கடையில் பார்சலாக வாங்கியும் கொடுக்கலாம். உதாரணமாக 20 நோன்பை விட்டவர் 20 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

நோன்பை விட்ட ஒருவர் பித்யாவைக் கூட கொடுக்க முடியாத அளவுக்கு ஏழையாக இருந்தால் அவருக்காக அவரது உறவினர்களில் ஒருவரோ அல்லது தனவந்தர் ஒருவரோ முன்வந்து குறித்த பித்யாவை வழங்க முடியும்.

யா அல்லாஹ்!

எம் அனைவரது நோன்புகளையும் ரமழான் காலத்து ஏனைய அமல்களையும் முழுமையாக அங்கீகரித்து எமக்கு மன்னிப்பை அளித்து ரய்யான் எனும் சுவனத்தில் நுழைவிப்பாயாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top