அஷ்ஷைக் பளீல்
மனித நலன்களுக்காகவே இஸ்லாம் ஏவல் விலக்கல்களை உள்ளடக்கிய சட்டதிட்டங்களை தந்திருக்கிறது.
ஆனால், அதே மனித நலன்களுக்கு அந்த சட்டங்களால் பாதிப்பு வருமாயின் அந்த சட்டங்கள் தளர்த்தப்படும்; அல்லது நீக்கப்படும்.
இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது ஹராம். ஆனால், பசி கடுமையாகி சாப்பிட்டு உயிரை பாதுகாக்க பன்றி இறைச்சியைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை என்ற நிலை வந்து விட்டால் பசியைப் போக்குவதற்கு எந்த அளவு உண்டால் போதும் என்ற நிலை இருக்கிறதோ அந்த அளவை மட்டும் பன்றி இறைச்சியில் இருந்து சாப்பிடலாம் என்பது மட்டுமல்ல கட்டாயமாக சாப்பிடவும் வேண்டும். மதுவும் அப்படித்தான்.
தொழுகைக்காக வுளூ செய்வது கடமை. ஆனால் தண்ணீர் இல்லாத போதும் அல்லது இருந்தும் உபயோகிக்க முடியாத போதும் தயம்மும் செய்யலாம். தண்ணீரை உபயோகித்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று உறுதியாக தெரிந்தும் கூட அதனை உபயோகிப்பது தற்கொலை முயற்சிக்கு சமமாகும்.என்ன அருமையான சட்ட ஒழுங்கு!
களவு எடுக்கும் ஒருவரது கையை வெட்ட வேண்டும் என்பது இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களில் ஒன்றாகும். ஆனால், வறுமை தாண்டவமாடும் சூழலில் அவர் களவெடுத்தால் அந்த சட்டம் ரத்தாகிவிடும்.
மனித இயல்பை இஸ்லாம் கவனத்தில் எடுக்கிறது. அதனை அனுசரித்துப் போகிறது. சங்கடங்களை மனிதன் சந்திக்கும் வேளைகளில் இஸ்லாமிய ஷரீஆ நெகிழ்ச்சியான சட்டங்களை வழங்கும்.
1.”لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا [البقرة: 286].
“அல்லாஹ் ஒரு ஆத்மாவை அதன் சக்திக்கு அப்பால் நிர்ப்பந்திக்க மாட்டான்.”
- وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ [الحج:78]
“உங்களது மார்க்கத்தில் எந்த ஒரு சங்கடத்தையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.”:
3.( إِنَّ الدِّينَ يُسْرٌ ، وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلاَّ غَلَبَهُ ، فَسَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا) رواه البخاري (39) ومسلم (2816)
“மார்க்கம் இலகுவானது. யார் மார்க்கத்தில் கடும் போக்கைக் கடைப்பிடிக்கிறாரோ அவரை அது கண்டிப்பாக மிகைத்து விடும். எனவே நடுநிலைப் போக்கைக் கடைப்பிடியுங்கள். உங்களால் அவ்வாறு செய்ய முடியாவிட்டால் அதற்கு அண்மித்த ஒன்றைக் கடைப்பிடியுங்கள்.”
The Prophet (ﷺ) said,
“The religion (of Islam) is easy, and whoever makes the religion a rigour, it will overpower him. So, follow a middle course (in worship); if you can’t do this, do something near to it”
போன்ற குர்ஆனிய ஹதீஸிய வசனங்கள் இதற்கான அடிப்படைகளாக அமைகின்றன.
அதேபோன்றுதான் ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகை தொடர்பான சட்டங்கள் நெகிழ்ச்சித் தன்மை கொண்டவையாகவே காணப்படுகின்றன.
வீட்டில் தனித்துத் தொழுவதை விடவும் பள்ளிவாயலுக்கு சென்று ஜமாஅத்தோடு தொழுவது 27 மடங்கு அதிக நன்மையை பெற்றுத் தரும்.ஜமாஅத் தொழுகைக்கு வராமல் வீடுகளில் தொழுபவர்களது வீடுகளை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று ஹதீஸில் வந்துள்ளது. இது ஒருபுறமிருக்க ஜமாஅத்தோடு தொழுவதால் ஏற்படும் ஆன்மீக, சமூக நலன்கள் அனந்தம்.
ஆனால், குளிர், மழை, காற்று, எதிரியின் பயம் போன்றன கடுமையாக இருக்கும் பட்சத்தில் பள்ளிக்குச் செல்வதால் ஆபத்துக்கள் ஏற்படும் எனக் கருதப்படும் போது பள்ளிக்குப் போகாமல் வீட்டிலேயே தொழுது கொள்ள முடியும். என எமது சட்ட அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த சட்டத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில் கொரோனா வைரஸ் தொற்றும் எனப்ப பயந்தால் பள்ளிவாயலுக்கு போய் ஜமாஅத்தோடு தொழுவது ஆகாது என நவீனகால உலமாக்கள் ஃபத்வா வெளியிட்டிருக்கிறார்கள்.
கால சூழ்நிலைகள் மாறுவதற்கேற்ப இவ்வாறு நெகிழ்ந்து கொடுக்கும் இஸ்லாமிய ஷரியா அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்கிறது என்பது இதன் மூலமாக புலனாகிறது.
இஸ்லாம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட கொள்கை அல்ல அது ஒரு தெய்வீக மார்க்கம் என்பதற்கு இதனை தவிர வேறு என்ன ஆதாரத்தை காட்ட முடியும்? சுத்தம் சுகாதாரமாக இருப்பது, நோய் வராமல் இருப்பதற்கு தற்காப்பு முயற்சிகளில்படுவது, நோய்கள் வந்தால் சிகிச்சை செய்வது, இந்த ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்து அதற்குப்பின்னால் அல்லாஹ்தஆலா படத்திலே நோய்களை நீக்கும் படியும் பொறுமையை தரும்படியும் துஆச் செய்வது ஆகிய நான்கையும் இணைத்து சொல்லுகின்ற ஒரே ஒரு மார்க்கம் இஸ்லாம் தான்.
அந்த வகையில் இஸ்லாம் அற்புதமானது. தனித்துவமானது. மனித இயல்போடு இசைந்து போகிறது. எனவே அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதற்கு இதுவே தக்க சான்றாகும்.இத்தகைய மார்க்கத்தில் வாழுவதற்கு கிடைத்திருப்பது பெரும் பாக்கியமாகும். இஸ்லாத்தின் இந்த மனிதாபிமான போக்கை உலகத்துக்கு எடுத்துச் சொல்வது எமது கடமையுமாகும்.




