உலமாக்களுக்கான நிகழ்ச்சி

மாஷா அல்லாஹ் பிறந்தகமான நாச்சியாதீவில் கடந்த (10ஆம் திகதி ) உலமாக்களுக்கான விசேட ஒன்றுகூடல் நிகழ்ச்சியொன்று நடைபெற்றது.

நீண்ட திட்டமிடலின் பின்னர் நாச்சியாதீவு ஜம்இய்யதுல் உலமாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் கருத்துரைகளை வழங்கிய வெளியூர்களில் இருந்து வந்த மூன்று உலமாக்களும் தமது செறிவான நிகழ்ச்சி நிரல்களுக்கு மத்தியில் நிகழ்ச்சிக்காக முழு நாளையும் ஒதுக்கி வருகை தந்திருந்தார்கள்.

அனுராதபுர மாவட்ட ஜம்இயதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷைக் யாஸீீனின் வரவேற்புரையுடனும்

ஹாபிழ் அஸ்லமின் கிராஅத்துடனும்

ஆரம்பமான இந்த நிகழ்வில் பின்வரும் தலைப்புக்களில் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன.

கருத்து வேறுபாடுகளின் போது உலமாக்கள் கையாளவேண்டிய ஒழுக்கங்கள் எனும் தலைப்பில்

ஹம்பாந்தோட்டை மாவட்ட ஜம் இய்யதுல் உலமாவின் தலைவரும் ஜம் இய்யாவின் மத்திய செயற்குழு உறுப்பினருமான ஷெய்க் அர்கம் நூராமித் அவர்களும்

ஸலபுஸ் ஸாலிஹீன்களது சிந்தனைப் பாரம்பரியங்களது ஒளியில் தற்கால நெறிதவறிய சிந்தனைகள் எனும் தலைப்பில் ஜம் இய்யாவின் மத்திய செயற்குழு உறுப்பினரும் பரகஹதெனிய தாருத் தெளஹீத் மத்ரசாவின் விரிவுரையாளரும் உண்மை உதயம் சஞ்சிகையின் ஆசிரியருமான ஷெய்க் இஸ்மாயில் ஸலபி அவர்களும்

தற்கால சூழலில் உலமாக்கள் முன்னுரிமைப்படுத்த வேண்டிய அம்சங்கள் எனும் தலைப்பில்

ஷெய்க் ஃபழீல் நளீமி அவர்களும்

கரைந்து போகாமல் கலந்து வாழும் இஸ்லாமிய வாழ்வு முறையும் தற்கால முஸ்லிம்களும் எனும் தலைப்பில் கண்டி மாவட்ட ஜம் இய்யதுல் உலமாவின் தலைவரும் ஜம் இய்யாவின் மத்திய செயற்குழு உறுப்பினருமான ஷெய்க் உமர்தீன் ரஹ்மானி அவர்களும்

உரைகளை நிகழ்த்தினார்கள்.

மேற்படி நிகழ்வு காலத்தின் தேவை கருதி பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவையாவன:-

1.சின்னாபின்னப்பட்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தை ஐக்கியப்படுத்துதல் என்ற மிகப்பெரும் வாஜிபை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டல்களை வழங்குவது.

2- முஸ்லிம் சமூகத்தை பயங்கரமாக அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அதிமுக்கிய சவால்களை இனம்காட்டி அவற்றை எதிர்கொள்வதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற மனப்பாங்கை ஏற்படுத்துவது.

3- சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் ஈருலகிலும் வெற்றியடைவதற்கும் ஆத்மீக ரீதியாகவும், அறிவுரீதியாகவும் உலமாக்கள் தம்மைத் தொடர்ந்தும் தயார்படுத்த வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவது.

4.தஃவா, அறிவு, சமூகப்பணிகள் என்பன உலமாக்கள் மீதான பர்ள்- அமானத் என்பதை பலமாக வலியுறுத்துவது

என்பனவாகும்.

மேற்படி கருத்தரங்கில் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த அரபு மத்ரஸாக்களது அதிபர்கள் உஸ்தாத்மார்கள் பள்ளிவாயல்களது கதீப்மார்கள் மத்ரஸா உயர்வகுப்பு மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாச்சியாதீவு ஊருக்கு 25 வருடங்களாக மார்க்கப் பணி செய்த மெளலவி அப்துல் வாஹித் மெளலவி அபூபக்கர் ஆகிய இருவரும் சால்வை போர்த்தப்பட்டு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

கலந்துகொண்டவர்களுக்கான சிற்றூண்டி மற்றும் பகலுணவு என்பன இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த சமூக ஒற்றுமைக்கான வழிகாட்டல்களை உள்ளடக்கிய கையேட்டின் பிரதிகளும் சில உரைகளுக்கான குறிப்புக்களும் விநியோகிக்கப்பட்டன.

கலந்துகொண்டவர்களது அபிப்பிராயங்களை கண்டறிந்தால் எதிர்கால நிகழ்ச்சிகளை திறம்பட ஏற்பாடு செய்ய முடியும் என்பதற்காக கருத்துக்கணிப்புப் படிவமும் விநியோகிக்கப்பட்டது.அதில் அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் மார்க்க ரீதியான சவால்களையும் தீர்வுகளையும் எழுதும் படி கலந்து கொண்ட உலமாக்கள் வேண்டப்பட்டனர்.

இது போன்ற பல நிகழ்வுகள் சமூகத்தின் பலதரப்பட்டவர்களுக்குமாக எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் கலந்துகொண்ட பலராலும் முன்வைக்ப்பபட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நன்றியுரையை நாச்சியாதீவு ஜம்இய்யாவின் தலைவர் அல்ஹாபிழ் பைருஸ் நிகழ்த்தினார்கள்.

நாச்சியாதீவு மொஹிதின் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினரும் நலன்விரும்பிகளும் சில தனவந்தர்களும் நிகழ்ச்சிக்காக பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள்.

தலைப்புகளின் முக்கியத்துவம் கருதி உலமாக்கள் அல்லாத ஆர்வமுள்ள வேறுபலரும் கலந்துகொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

அல்லாஹ் அனைவரதும் முயற்சிகளை அங்கீகரித்து வெற்றியடையச்செய்வானாக!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top